Friday, July 17, 2015

பாலியல் வதையின் சமூக விளைவு

பெண்கள்/சிறுமிகள்/குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களும் சித்திரவதைகளும் அடிக்கடி நடப்பது இப்போதுள்ள ஊடக வசதிகளால் உடனுக்குடன் வெளியில் வருகிறது. நாம் ஒவ்வொருவரும் இவ்வாறான பயங்கரச் செய்திகளால் அருட்டப்படுகிறோம். எம்மாலானதைச் செய்ய விழைகிறோம். பாலியல் குற்றங்களைக் குறைப்பதும் நிறுத்துவதும் நீண்டகாலச் செயற்றிட்டம். இலங்கை போன்றவொரு நாட்டில் புரட்சிகர மாற்றம் ஒன்றில்லாமல் சாத்தியப்படுத்தக் கடினமான ஒன்று.

இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, இத்தகு நிகழ்வுகளால் ஏற்படப்போகும் உடனடித் தாக்கம் என்ன? அதுதான் மிகவும் வலிதரும் ஒன்றாக இருக்கிறது. எம் பெண் பிள்ளைகளது சுதந்திரமும் நடமாட்டமும் முடக்கப்பட்டு அவர்கள் வீடுகளுக்குள் அடைக்கப்படப் போகிறார்கள்.
சிறுமிகளதும் பெண் குழந்தைகளதும் சமூக ஊடாட்டமும் சமூக வெளியும் குறுக்கப்பட்டு ஒடுக்கப்படப் போகிறது. பிள்ளைகளை வெளியே விடவும் ஆட்களோடு பழக அனுமதிக்கவும் பெற்றோரும் வளர்ந்தவர்களும் அஞ்சுகிறார்கள். விபரமறிந்த வயதிலுள்ள பெண் பிள்ளைகள் அச்சம் காரணமாகத் தம்மைத் தாமே முடக்கிக்கொள்கிறார்கள்.

சிறுவயதுகளில் நாம் ஊடாடும் வெளியும் பரப்பும் மனிதர்களின் எண்ணிக்கையுமே எமக்குக் கிடைக்கும் முதன்மையான கல்வி. அதுவே எம் ஆளுமையை விருத்தி செய்கிறது. பெண்ணின் நடமாட்ட வெளியும் சமூக வெளியும் குறுக்கப்பட்டு வீடுகளுள் முடக்கப்படும்போது அப்பெண் இயல்பாகவே ஆளுமைக் குறைவினை எதிர்கொள்ள நேருகிறது.

கடைசியில். பெண்கள் குறுகிய புத்தி படைத்தவர்கள், பரந்த பார்வை அற்றவர்கள், தொலைக்காட்சி நாடகங்களின் அடிமைகள், உலகம் தெரியாதவர்கள் என்றும், அவ்வாறே அவர்கள் படைக்கப்பட்டார்கள் என்றும் கூசாமல் சொல்லித் திரிவார்கள்.

கண்ணைத் தோண்டிவிட்டு, பார்க்கத்தெரியாதவள் என்று குற்றம் சாட்டுவார்கள்.
ஒவ்வொரு பாலியல் வதை நிகழ்வும் அச்சூழலின் ஒட்டுமொத்தப் பெண்களையும் ஒடுக்குகிறது. ஆளுமையற்றவர்களாக்குகிறது. மேலும் மேலும் அடிமைப்படுத்துகிறது.

Muralitharan Mauran

புங்குடுதீவு பாலியல் வதையும் 15 வயது சிறுவன் செய்த பாலியல் தாக்குதலும் ஒரே மாதிரியானவை அல்ல. இரண்டும் வெவ்வேறு தளங்களில் அணுகப்படவேண்டியவை. அவற்றுக்கான தீர்வுகளும் வேறுபட்டவை.

15 வயது சிறுவன் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உள அமைப்பைப் பெற்றுள்ளான். இத்தகு உளவமைப்பை இல்லாதொழிக்கக்கூடிய வழிமுறைகளைக் கண்டடைவதன் மூலம் இவ்வகைக் குற்றங்களைக் குறைக்கலாம்.

புங்குடுதீவு குற்றவாளிகள் வன்முறையும் அதிகாரம் இணைந்த ஒரு "சிஸ்டத்தின்" பகுதியாக இருக்கிறார்கள். அவர்களது தீங்கான உளவமைப்புடன் இக்குற்றத்தில் "சிஸ்டத்தின்" பங்கும் பெருமளவில் இருக்கிறது. இங்கே இந்த அமைப்பினை மாற்றுவதற்கான வழிமுறைகளைத் தேடவேண்டியுள்ளது.

No comments:

Post a Comment