Saturday, September 21, 2013

கனவு துரத்தும் வாழ்வு :பயங்கரக் கனவு

நல்ல காலம்
உங்களிடம் கனவுகளை ஒளிபரப்பும் கருவிகள் இல்லை.

நாம் காண்பதற்கான போரையும் அமைதியையும்
நாம் காண்பதற்கான பாதுகாப்பையும் அபிவிருத்தியையும்
நாம் காண்பதற்கான சனநாயகத்தையும் சமவுரிமையையும்
நாம் காண்பதற்கான செய்திகளையும் மனிதர்களையும்

நீங்களே தேர்ந்தெடுத்து ஒளிபரப்ப இயன்றது போன்று
நாம் காண்பதற்கான கனவுகளையும் ஒளிபரப்ப உங்களிடம் கருவிகள் இல்லாது போயிற்று.

எமது கனவுகளைத் தேசிய மயமாக்கவோ குடும்பச் சொத்தாக்கவோ பணத்தினால் ஆளவோ
உங்களால் முடியாது போயிற்று..

கனவுகள் ஊற்றெடுக்கும் மனதின் ஆழங்களை
உங்கள் கருத்துக்களாலும் பரப்புரைகளாலும்
நறுமணம் வீசும் குப்பைகளாலும்  

அடைத்துவிட நீங்கள் முயன்றாலும்,

அதையெல்லாம் உடைத்துப் பீறிட்டு எம் கனவுகளுள் எரிய வல்லன,
நாயாய் நாம் உழைத்த பின்னும் எம் குழந்தை பசியில் வாடும் வலி.
ஆயுதக் கொலைப் படையின் சித்திரவதையின் முன் எம் உரிமைகள் நசுங்கிய வலி..  
எம் பிள்ளைகளுக்கான இயற்கையும் வளங்களும் கல்வியும் நல்வாழ்வும் உடல் நலமும் உள நலமும்
கண்முன்னே உங்களால் களவாடப்படும் வலி...

வாய் பேசவோ எதிர்த்து நிற்கவோ நீதி கேட்கவோ இயலாதவர்களாக்கப்பட்ட
அடிமைகள் எமக்கு விழித்திருத்தல் வலி நிறைந்தது..
வலி மறக்க,

எம் வலியில் வார்க்கப்பட்ட கனவுகளுக்குள் புகுந்து ஒடுங்கிச் சுருண்டு தூங்கிப்போகிறோம்..

நீங்கள் ஒளிபரப்பாத,
எம் வலியில் முளைத்த கனவுகளோ
உங்கள் தூக்கத்தைக் குத்திக் குத்திக் குழப்புவது பற்றி
நாம் அறியோம் ஆண்டைகளே..

ஆழ்மன வலிகளில் சுரந்த எம் அதிகாலைக் கனவுகள்
விடுதலைக் கனவுகளாக இருந்து விடுகின்றன.

அடிமைப்பட்ட மக்களின் அதிகாலைக் கனவுகளைக் கண்டு அஞ்சுவதேன் ஆண்டைகளே
உங்கள் அதிகாரக் கனவுகள் போன்று எம் அதிகாலைக் கனவுகள் பலிப்பதில்லை.

ஏதுமற்ற இந்த அடிமைகளின் கனவுகள்
பயங்கரக் கனவுகளாய் உம் படுக்கைக்குள் புகுந்து பயமுறுத்துகிறதாமே?
விசமற்ற எம் விடுதலைக் கனவுகள் துரத்தத் துரத்த

கைகளிலும் கழுத்திலும் தாயத்துக் கயிறுகளைக் கட்டியிறுகிக் கதிகலங்கித் திரிகிறீர்களாமே?
உள்நாட்டு வெளி நாட்டு ஆலயங்கள் தோறும் நேர்த்தி வைத்துக் கிடக்கிறீர்களாமே?
தூங்கவே முடியாமல் துப்பாக்கிப் படைகளின் உள்ளாடைகளுக்குள்ளேயே நீரும் நும் குடும்பங்களும் ஒளிந்து கிடக்கிறீர்களாமே?
சின்ன எதிர்ப்புக்கும் முகம் வெளிறி உடல் உதறிச் சனத்தைச் சுட்டுச் சனத்தைச் சுட்டுச் சமாளிக்கப் பார்க்கிறீர்களாமே?
அசுவமேத யாகமாமே? ஆயிரம் பிக்குகளுக்குத் தானமாமே?
இன வாத மதவாத நெருப்பெரித்து நெருப்பெரித்தெம் கனவுகளைக் கையாளும் முயற்சியும் உளதாமே?


அஞ்சாதீர் ஆண்டைகளே
பலிக்குமென்ற நம்பிக்கை எமக்கில்லாத வரையினிலும் பயங்கரமற்றவை எம் வலி சுரந்த கனவுகள்

ஒடுக்குமுறையின் ஊமை வலியில் சுரந்த விடுதலைக் கனவொன்று
அதோ
அந்த அடிமை மனுசியின் தூக்கத்தினுள், அவள் மூளைக்குள் சிறு பொறியாய் ஒளிர்கிறது..

மெல்லிய சிறு பொறியை அஞ்சாதீர் ஆண்டைகளே...

அணு உலையுள் முதல் குஞ்சு அணு பிளப்பதைப் போன்று..
பெற்றோல் குதமொன்றில் குட்டித் தீக்குச்சி விழுவதைப் போன்று..
மாபெரும் வெடிபொருட் கிடங்கில் ஒரு  சின்ன.. செல்லத் தீப்பந்தம் விழுவதைப் போன்று

அவளது கனவு பயங்கரமற்றது..

அஞ்சாதீர் ஆள்வோரே..


தூங்காதீர் ஆள்வோரே..

அணு உலையுள் முதல் குஞ்சு அணு பிளப்பதைப் போன்றது..
பெற்றோல் குதமொன்றில் குட்டித் தீக்குச்சி விழுவதைப் போன்றது..
மாபெரும் வெடிபொருட் கிடங்கில் ஒரு  சின்ன..  தீப்பந்தம் விழுவதைப் போன்றது

அந்த ஏழை மனுசியின் பயமற்ற கனவு..



--
மு. மயூரன்
19-09-2013
[பாடிப்பறை கவியரங்கம்]

Tuesday, September 10, 2013

ஓசை பெருத்த குண்டு உலகம் அழுத குண்டு

குண்டுகளின் தன்மையைப் பொறுத்து அவற்றின் ஓசை மாறுபடுவதைக்காட்டிலும் அவை வெடிக்கும் இடங்களைப்பொறுத்து அவற்றின் ஓசை அதிகம் மாறுபடுகிறது.

வன்னியில் போடப்பட்ட பாரிய வான்குண்டை விடவும் கொழும்பில் வெடிக்கும் சிறு கைக்குண்டு ஓசை பெருத்தது. காசுமீரிலும் சத்தீஸ்காரிலும் அஸ்ஸாமிலும் தொடர்ச்சியாக வீசப்படும் குண்டுகளை விடவும் பம்பாயில் வெடிக்கும் குண்டொன்று பெரும் ஓசை எழுப்பக்கூடியது. பாலஸ்தீனத்தில் வந்து வெடிக்கும் ஆயிரக்கணக்கான குண்டுகள் ஓசையின்றியும் இஸ்ரேலில் என்றாவது வந்துவிழும் எறிகுண்டொன்று பேரிடியோசையுடனும் வெடிக்கின்றன.

Tuesday, September 3, 2013

தலித்திய சீசன் - தொகுப்பு 1

சாதி ஒடுக்குமுறை என்பது மனுதர்ம சாத்திரத்தோடு தான் தொடங்கியது என்றும் மனுதர்ம சாத்திரமே சாதி ஒடுக்குமுறைக்கும் வர்ணப்பிரிவுகளுக்கும் வித்திட்டதென்றும் நம்பச்சொல்லி ஏன் ஒற்றைக்காலில் நிற்கிறார்களோ தெரியவில்லை.

தொல்காப்பியர்தான் தமிழைக் கண்டுபிடித்தார் என்று சொல்வதற்கு ஒப்பான அறிவியல்முறையற்ற நம்பிக்கை இது.

மனுதர்மத்தின் கைகள் எட்டியிருந்திருக்க முடியாத ஆபிரிக்காவில் இருக்கும் சாதி ஒடுக்குமுறைகளுக்கும் சாதியத்துக்கும் கூட மனுதர்மமேதான் வித்திட்டதா?

ஒரு நூல் குறுகிய காலத்துக்குள் இந்தியத் துணைக்கண்டத்தின் ஒட்டுமொத்த சமூக அடுக்குகளையும் நிறுவி ஏற்றதாழ்வுகளை உண்டாக்கிக் கட்டிக்காத்து நிர்வகித்தது என்று நம்புவது கடவுள் ஏழு நாளில் உலகைப்படைத்தார் என்று நம்புவது போன்ற சிறுபிள்ளைத்தனமாகும்.

சாதியத்தையும் வருணாச்சிரமத்தையும் மனுவில் தொடங்குவதென்பது அச்சமூக ஏற்றதாழ்வுகளின் வரலாற்று இயங்கியல் வளர்ச்சியையும் அடிப்படைகளையும் மறைக்கும் அரசியல் என்றே எண்ணத் தோன்றுகிறது.

வளங்களுக்கான ஆக்கிரமிப்புப் போர்கள், ஆட்சி அதிகாரம், அதிகாரப் படிநிலையாக்கம், அதிகாரமும் மதங்களும் செய்துகொள்ளும் வழக்கமான சமரசம், போரால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறை, பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்து எழும் தொழிற்பிரிவினைகளும் வர்க்கப்பிரிவினைகளும், மரபான தொழிற்குழுக்கள், குடும்பங்கள் என்று பல்பரிமாணமுள்ள நீண்ட வரலாற்று வளர்ச்சியினூடாகவே சாதியமும் வர்ணாச்சிரமமும் நிலைபெற்றிருக்க முடியும்.

மனுதர்ம சாத்திரத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியதெல்லாம் அந்நூலின் காலத்தில் இந்த சமூக அமைப்பு எப்படி இருந்தது, எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பன போன்ற தகவல்களையே.

சாதி-வர்ண அரசியலை முற்றுமுழுதாக "வர்க்க நீக்கம்" செய்கிற அடையாள அரசியலின் அரசியலுக்கு ஆரியதிராவிடக் கதைகளும் மனுதர்மத்தில் சாதியைத்தொடங்கும் படைப்புக் கோட்பாடும் அவசியப்படுகிறது என்று தான் நினைக்கிறேன்.