Saturday, September 22, 2012

மக்களுடைய கோபம்

மக்களுடைய கோபம் என்பதும் மக்களுடைய உணர்ச்சிகள் என்பதும் நேர்மையான முற்போக்கான அரசியல் கட்சி ஒன்றினால் நெறிப்படுத்தப்படும்போதுதான் இலக்கு நோக்கிய போராட்டமாக அமைந்து வெற்றியடைய முடியும்.

நாம்தமிழர் போன்ற உணர்ச்சி அரசியலை நம்பியிருக்கும் கட்சிகள் எல்லாம் மக்களது கோபத்துக்குத் தலைமைதாங்க வெளிக்கிடுவது அழிவைத்தான் கொண்டுவந்து சேர்க்கும்.

#தமிழகம் #உணர்ச்சி #தாக்குதல்

வர்க்கக் கட்சி

இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்ட உரையாடல் "வர்க்கக் கட்சி" என்ற சொல்லின் பொருள் ஆழத்தினை எனக்குப் புரிய வைத்தது. இதுவரை காலமும் இந்தச்சொல்லைப் பயன்படுத்த எனக்குள் மிக நுண்ணியதான ஓர் இனம்புரியாத தயக்கம் இருந்தே வந்தது. அதற்குக் காரணம் "வர்க்க சார்பு" என்பதன் உள்ளார்ந்த பொருள் எனக்கு சரியாகப் புரியாமல் இருந்ததே.


கூடங்குளம் கட்டுக்கதைகள்

கூடங்குளம் போராளிகளிடம் தோற்றுவிடும் பயத்திலிருக்கும் அதிகார வர்க்கம் அப்போராட்டத்தை மலினப்படுத்தி வீரியமிழக்கச்செய்யும் வகையிலும் அப்போராட்டத்துக்கான மக்களாதரவினை முடிந்தளவு குறைக்கும் வகையிலும் பல்வேறு கட்டுக்கதைகளைப் பரப்பிவௌர்கிறது.

அம்மக்கள் இவ்வளவு காலமும் இருந்துவிட்டு இப்போது ஏன் போராடுகிறார்கள் என்ற கேள்வி இப்போது உருவாக்கப்பட்டு உலாவ விடப்பட்டுள்ளது. எனது fb நட்புக்கள் சிலர் கூட இந்தக்

கேள்வியைக் கேட்கத்தொடங்கியுள்ளார்கள்.

மக்களது இந்தப்போராட்டம் என்பது தமிழர்களுக்கானதோ, தமிழகத்துக்கானதோ, இந்தியாவுக்கானதோ, ஏன் அணு உலைக்கெதிரானதோ கூட அல்ல. இது மனித குலத்திற்கானது. ஒட்டுமொத்த உலகின் எதிர்காலச் சந்ததிகளுக்கானது.

மக்கள் போராட்டம் பற்றிய தெளிவு உள்ளவர்களுக்கு இது புரியும்.

இங்கே நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு, மக்களின் பக்கம் சாய்வதா, எதிரியின் பக்கம் சாய்வதா என்பதுதான்.

இப்போராட்டத்துக்கு நேரடிப் பங்களிப்பு வழங்க முடியாவிட்டாலும், கருத்தளவிலாவது வலிமையான ஆதரவை வழங்குவது உயிர்களை நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
 

கையெழுத்துக்கு அறிக்கை அனுப்பும் நண்பர்களே,

இந்திய மக்களின் உழைப்பை உறிஞ்சி இலாபம் பார்க்க வரும் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு மின்சாரத் தீனி போடவேண்டும். உலக அணு மாஃபியாக்களுக்க்கு பணம் பார்க்கும் வழி செய்யவேண்டும். இவற்றுக்காக ஏகாதிபத்தியத்துக்கும் மூலதனத்துக்கும் தரகு வேலை பார்க்கிறவர்களாக இந்திய மத்திய மாநில அரசுகள் உள்ளன. தரகர்களின் கடிநாய்களான காவல் துறை சொந்த மக்களையே பார்த்துக் குரைத்தும்
கடித்தும் வுசுவாசம் காட்டுகின்றன. இவைதாம் கூடங்குளத்தின் காட்சிகள்.

இந்த வெளிப்படையான உண்மைகளை நேரடியாக அம்பலப்படுத்தி இந்திய அரசு எனும் தரகுக் கம்பனியை எதிர்த்து நிற்பது ஒன்றுதான் கூடங்குளத்து மக்களை ஆதரிக்கும் நேர்மையான வழிமுறை.

அதை விட்டுவிட்டு "ஜனநாயக விழுமியங்களுக்குக்" காய்ச்சல் வந்துவிட்டது, இந்திய அரசு கடைக்கண் பார்வையை அருளி இந்த மக்கள் படும் துயரை தெரிந்துகொள்ள வேண்டும், இந்திய இறையாண்மையை நாம் சல்யூட் அடித்து மதித்து நிற்கிறோம் என்றெல்லாம் எவருக்கும் நோகாத, அரசியலே இல்லாத வெற்று வார்த்தைகள் கொண்ட அறிக்கைகளை எனக்கு அனுப்பி கையெழுத்துக் கேட்க வேண்டாம். நான் கையெழுத்திட மாட்டேன்.

நன்றி.
 
கையெழுத்துக் கேட்டு வந்த அறிக்கை : http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83116/language/ta-IN/article.aspx
 
 

Wednesday, September 19, 2012

கூடங்குளம் எனும் பாடப்புத்தகம்

கூடங்குளத்தில் எழுந்துள்ள மாபெரும் மக்கள் எழுச்சியானது எமது காலத்தில் எமக்கருகே நிகழும் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.

"மக்கள் போராட்டம்" என்றால் என்ன என்பதை அறியாதவர்களாகவே நாம் எமது அரசியல் தலைமைகளால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளோம். எமக்கு கூடங்குளம் ஒரு பெரும் பாடப்புத்தகம்.

அதி நவீனப் போர்க்கருவிகளோ, போர்த் தளபதிகளோ, அரசியல் இராசதந்திரச் செல்வாக்குகளோ, பணபலமோ, உலகளாவிய மாஃபியா வலையமைப்புக்களோ அந்த மக்களிடம் இல்லை. மாபெரும் போராளி இராணுவமோ, அதற்குப் பயிற்சி அளித்து ஆதரிக்க ஓர் அண்டை நாடோ இல்லை. அவர்களுக்கென்று தொலைக்காட்சி அலைவரிசைகளோ வானொலிகளோ பத்திரிகை ஒன்று தானுமோ இல்லை. வெறும் கைகளும் உறுதியான நெஞ்சும் மட்டுமே உள்ளது.

ஆனால், அண்டை மாநிலங்களிலெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன, ஜப்பான் சுவீடன் உள்ளிட்ட நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களிடையே அவர்களுக்கு ஆதரவான எழுச்சிகள் உருவாகின்றன. இனம், மொழி, சாதி, தேச எல்லைகள் கடந்து அவர்களை ஆதரித்து நிற்கப் பல நூறாயிரம் மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதிபயங்கர இராணுவத்தைக் கொண்ட இந்தியப் பிராந்திய வல்லரசு அம்மக்களைக்கண்டு அஞ்சுகிறது.

இது எவ்வாறு சாத்தியம்?