Monday, January 13, 2014

பாடல் : ஆளறியாக் காட்டுக்குள் சின்னஞ்சிறு பூக்கள்

யாருக்கும் தெரியாமல்
யாரையுமே அறியாமல்
ஆளறியாக் காட்டுக்குள்
    சின்னஞ்சிறு பூக்கள்

மணல் உருகும் பாலைவனம்
வெயிலெரியும் கானல்நிலம்
ஒருவருமே அறியாமல்
    தன்னந்தனி ஊற்று

(யாருக்கும் தெரியாமல்)

மாநகரின் பேரிரைச்சல்
வீதிகளின் புகைநெரிசல்
பேருந்தின் கதவோரம்
    கொஞ்சம் குளிர் காற்று

காட்டுக்குள் பூவாசம்
காணாத நீரோட்டம்
மாநகரில் குளிர் வீசும்
    என்னுடைய நேசம்

(யாருக்கும் தெரியாமல்)

கரும்பாறைக் கசிவுகளை
கதைகேட்டால் சிலவேளை
நூற்றாண்டு ஈரத்தின் கதை சொல்லலாம்

இரும்பான கண்ணுக்குள்
கசிகின்ற நெஞ்சத்தின்
முன் கதையின் ஈரத்தில் கடல் மூழ்கலாம்.

(யாருக்கும் தெரியாமல்)

தாய்பாலின் பாரம் போல்
பொழியாத மேகம் போல்
வழங்காத நேசம்தான் வலிக்கின்றதே

எதிர்க் காற்றில் இசைத்துளியாய்
எழுதாத கவி வரியாய்
காலத்தில் என் நேசம் கரைகின்றதே..

(யாருக்கும் தெரியாமல்)

[22-11-2013]

Wednesday, January 8, 2014

மெல்ல மறையும் Facebook காலம்


Facebook, Twitter போன்றவை உருவாக்கிய சமூக வலையமைப்புக் காலம் மெல்ல மறைந்து வருவதாக இப்போது இணையக் குடிமக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தமிழ்ச்சூழலில் வலைப்பதிவுகளின் காலம் மங்கி, சமூக வலைத்தளங்களின் காலம் உருவானதை நம்மிற் பலர் கண்முன்னே கண்டிருக்கிறோம். இப்போது Whatsup, Viber போன்றவை உருவாக்குகின்ற தனிப்பட்ட உரையாடல் வலையமைப்புக்களை நோக்கி இளைய சமுதாயம் நகர்வதாகப் புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன.

Facebook போன்றவற்றை இளம் சமுதாயம் அயர்ச்சியுடன் பார்க்கிறது. இது பயன்படுத்தக் கடினமானதாயும் பயனற்றதாயும் இருப்பதாக உணர்கிறது.

கடவுட்துணியின் பின்னல்கள் அவிழும்போது கவிதைகள் பிறக்கின்றன




இந்தச் சிவன் படம் பலநூறாண்டுகால ஆன்மீக வரலாற்று அலைக்கழிவை மனதினுள் சொட்டிச் சென்றது.
சுடலையில் ஆடும் பிணந்தின்னிச் சிவனின் உருவம் எம் மனிதர்களது வரலாற்றின் நுண்ணிய பக்கங்களுக்குள் மனதைக்கொண்டு செலுத்த வல்லது.
சிவன் என்று இன்று "இந்துக்" காரர்களால் மதம் மாற்றி உள்வாங்கப்பட்ட சாமி ஒன்றல்ல. பல.

குறிப்பாக இந்தச் சுடலைச்சிவனின் உருவம் மானிடவியல் ரீதியாக ஆர்வத்தைப் பெருக்குவது.

ஆலன் டூரிங் : சமப்பாலுறவாளர்கள்/தற்பாலீர்ப்புக் கொண்டவர்கள் மீதான வெறுப்பு


சமப்பாலுறவாளர்கள்/தற்பாலீர்ப்புக் கொண்டவர்கள் மீதான வெறுப்பு எவ்வளவு தூரம் மனித இனத்துக்கு எதிரானது என்பதற்குக் குறியீடாகி நிற்கிறார் ஆலன் டூரிங் (Alan Turing).

ஒரு மனிதரது ஆளுமை, திறமை, சமூகப்பயன், உணர்வுகள் போன்ற அனைத்தையும் ஒரே கணத்தில் தூக்கி எறிந்துவிட்டு அம்மனிதரது பாலியல் தெரிவு என்கிற தனிப்பட்ட விடயத்துள் தலையிட்டு வெறுப்பை உமிழ்வதால் மனித குலம் இழப்பினையே சந்திக்கிறது.

சமப்பாலுறவாளர் மீதான வெறுப்பென்பது ஒரு பாலியல் வக்கிரம். நாம் எதிர்ப்பால் சேர்க்கையை மட்டும் விரும்புகிறோம் என்பதற்காக எம்மைத்தவிர மற்ற அனைவருமே கிரிமினல்கள் என்று முத்திரை குத்துவது ஒரு மனநோய்.

கணினித்துறை வரலாற்றில் தவிர்த்துப் பார்க்க முடியாத கண்டுபிடிப்புக்களைச் செய்தவர் டூரிங். அவரது அறிவு மனிதகுலத்துக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே அவரை ஆண்மை நீக்கி வதைத்து தற்கொலைக்குத் தள்ளியது இந்தப் பாலியல் வக்கிரம் பிடித்த சமூகமும் அதன் சட்டங்களும்.

வட்டிக் கடைக்காரர் பெட்டி

அவர் அந்த ஊரின் பெரிய வட்டிக்கடைக்காரர். நகை அடகு வைப்பது, வட்டிக்குக் கடன் வாங்குவதென்று அவ்வூர் மக்கள் அனைவரும் நாடுகின்ற ஒரே நபர் அவர்தான். அவரிடம் ஏராளமான செல்வம் புரண்டது. பணத்தைப் பதுக்கிப் பூட்டி வைப்பதிலும் கெட்டிக்கரர் அவர்.

ஒரு நாள் அவர் பணப்பெட்டியுடன் ஆற்றைக் கடந்து அக்கரை செல்லவேண்டியதாக இருந்தது. ஆற்றிலோ கடும் வெள்ளம். அடைமழைக்காலம்.

தங்க நகைகளும் பணமும் நிரம்பிய பெரிய கனமான பெட்டி ஒன்றையும் கையில் வைத்திருந்தார். நான்கைந்து பூட்டுப் போட்டுப் பூட்டப்பட்ட இரும்புப் பெட்டி அது.

ஆற்றைக்கடந்து படகில் போகும்போது ஆற்று வெள்ளத்தில் படகு அலைக்கழிந்தது. திடீரெனப்பெருகிய பெரும் வெள்ளத்தில் படகு சரிந்து கவிழ்ந்து பின் நிலை மீண்டது. அனைவரும் உயிர்தப்பியதை எண்ணி மகிழ்ச்சிக் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

நம் வட்டிக்கடைக்காரும் நல்ல மகிழ்ச்சியாக இருந்தார். படகில் இருந்த மற்றவர்களுக்கு வியப்பாய்ப் போய்விட்டது.

"ஐயா, உங்களுடைய பெட்டிதான் ஆற்றோடு போய்விட்டதே, அப்படி இருந்தும் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்கள்.

ஐயா மகிழ்ச்சி பொங்கச் சொன்னார், ,

"திறப்பு என்னிடம் தானே இருக்கிறது?"