Wednesday, July 30, 2014

பாசிசமும் அம்மாப் பாசமும்

தாய்ப் பாசத்துக்கும் 'பாசிச'த்துக்கும் தொடர்புண்டோ என்று யோசிக்கிறேன்...
இன்று பேருந்தில் தாய்ப்பாசப் பாடல்களாகப் போட்டுத் தாக்கிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச காலமாகவே ஓர் "அம்மா பாடல்" சிங்களத்தில் அநியாயத்துக்குப் பிரபலமாகியிருக்கிறது. தமிழகத்தில் காலையில் சுப்பிரபாதம் போடுவதுபோல் இப்போது சிங்களவர்கள் அப்பாடலைப் போடுகிறார்கள். பௌத்த விகாரைகளில் கூட "பண" போடுவதை விட அந்த அம்மா துதியைத்தான் அதிகம் ஒலிக்க விடுகிறார்கள் என்கிறார் அப்பா.
அம்மாவைப்பற்றி ஏதாவது சொன்னால் சொன்னவரைச் சீறிப்பாய்ந்து அடித்துத் துவைக்கவேண்டும் என்பது "ஆண்மை" க்கான ஒரு குறிகாட்டியாகச் சொல்லப்படுகிறது. ரவுடிகள் பெரும்பாலும் அம்மாவை உயர்ந்த இடத்தில் வைப்பார்கள்.
துணைவியைச் சமமாக நடத்த அஞ்சி அடக்கி ஆளும் ஆண்கள் அம்மாவை உயர்த்தி உருகி வழிந்தோடுவார்கள்.
ஆணாதிக்கத்தோடும், மதத்தோடும், தேசியவாதத்தோடும், சர்வாதிகாரத்தோடும் இந்த அம்மாப் பாச "சென்டிமென்ட்" பின்னிப் பிணைந்திருக்கும். நாட்டையும் மொழியையும் மதத்தையும் இனத்தையும் சாதியையும் அம்மாவாக்கி வழிபடுவார்கள்.
தாய்மீது காட்டவேண்டிய பற்றும் பாசமும் நிபந்தனைகள் அற்றதாக இருக்கவேண்டும் என்பார்கள். தர்க்கங்களுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும்.
கண்மூடித்தனமான பற்றும் பாசமும் அம்மா மீது வைக்கப்படவேண்டியது என்கிற மனநிலை உருவாக்கப்படுகிறது. பின்னர் அம்மா தேசத்துக்கும் இனத்துக்கும் நிலத்துக்கும் மதத்துக்கும் உருவகிக்கப்படுகிறாள்...
அம்மாவை விமர்சிப்பவரை அடித்துத் துவைக்கவேண்டும். கதைத்து மினக்கெடக்கூடாது.
தேசத்தையோ மதத்தையோ சாதியையோ இனத்தையோ விமர்சிப்பவரையும் அப்படித்தான் கையாளவேண்டும்.
அயோக்கியரின் கடைசிப் புகலிடம் தேசியவாதம் என்பார்கள்.
அயோக்கியரின் கடைசிப் புகலிடம் எது தெரியுமா? எம்முள் ஊட்டி வளர்க்கப்படும் கேள்விகளுக்கு இடம் கொடுக்காத பற்றும் வெறியும் தாம்.

No comments:

Post a Comment