Monday, January 13, 2014

பாடல் : ஆளறியாக் காட்டுக்குள் சின்னஞ்சிறு பூக்கள்

யாருக்கும் தெரியாமல்
யாரையுமே அறியாமல்
ஆளறியாக் காட்டுக்குள்
    சின்னஞ்சிறு பூக்கள்

மணல் உருகும் பாலைவனம்
வெயிலெரியும் கானல்நிலம்
ஒருவருமே அறியாமல்
    தன்னந்தனி ஊற்று

(யாருக்கும் தெரியாமல்)

மாநகரின் பேரிரைச்சல்
வீதிகளின் புகைநெரிசல்
பேருந்தின் கதவோரம்
    கொஞ்சம் குளிர் காற்று

காட்டுக்குள் பூவாசம்
காணாத நீரோட்டம்
மாநகரில் குளிர் வீசும்
    என்னுடைய நேசம்

(யாருக்கும் தெரியாமல்)

கரும்பாறைக் கசிவுகளை
கதைகேட்டால் சிலவேளை
நூற்றாண்டு ஈரத்தின் கதை சொல்லலாம்

இரும்பான கண்ணுக்குள்
கசிகின்ற நெஞ்சத்தின்
முன் கதையின் ஈரத்தில் கடல் மூழ்கலாம்.

(யாருக்கும் தெரியாமல்)

தாய்பாலின் பாரம் போல்
பொழியாத மேகம் போல்
வழங்காத நேசம்தான் வலிக்கின்றதே

எதிர்க் காற்றில் இசைத்துளியாய்
எழுதாத கவி வரியாய்
காலத்தில் என் நேசம் கரைகின்றதே..

(யாருக்கும் தெரியாமல்)

[22-11-2013]

1 comment:

  1. //எதிர்க் காற்றில் இசைத்துளியாய்
    எழுதாத கவி வரியாய்
    காலத்தில் என் நேசம் கரைகின்றதே..//
    //தாய்பாலின் பாரம் போல்
    பொழியாத மேகம் போல்
    வழங்காத நேசம்தான் வலிக்கின்றதே// touching lines.

    ReplyDelete