Saturday, March 23, 2013

And உம் தமிழும்



இக்காலத்தில் And உம் தமிழும் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. இலங்கைத் தமிழர் மீது பண்பாட்டு ரீதியான ஆதிக்கம் செலுத்தும் மூன்று முக்கிய மொழிகள் உண்டு. ஆங்கிலம், இந்தி , சிங்களம் ஆகியவையே அம்மொழிகள். அம்மூன்று மொழிகளது இலக்கணத்திலும் அன்றாடப் பயன்பாட்டிலும் (சிங்களத்தில் குறைவெனினும்) And எனும் சொல் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. அம்மொழிகளில் எழுதப்பட்டவற்றில் நிறைய இடங்களில் And வரும். தொலைக்காட்சி விளம்பரங்கள், செய்திகள் என்று எல்லாவற்றிலும் அவர்கள் மொழிகளில் நிறைய And இருக்கும்.


ஆனால் தமிழில் And இற்குச் சமமான சொற்கள் இயல்பாகப் புழக்கத்தில் இல்லை. அதற்குப்பதிலாக "உம்" விகுதி வழக்கத்திலிருக்கிறது. சிங்களத்திலும் "உய்" என்றொரு விகுதி இவ்வாறு வழக்கத்தில் இருக்கிறது. "அவளும் நானும் பயணம் போனோம்", "தொழிலாளர் உரிமைகளுக்கும் சம்பள உயர்வுக்குமாகப் போராட்டம் நிகழ்ந்தது" என்றவாறாகவே தமிழ் வசன அமைப்பு உள்ளது.

மொழிபெயர்ப்பின் போது மிக மிக இக்கட்டான, இன்றியமையாத சூழலில் And வரும்போது முடியாத கட்டத்தில் "மற்றும்" என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.

தேர்ச்சியற்ற, அக்கறையற்ற மொழிபெயர்ப்பாளர்கள் இப்போது And எனும் சொல்லை எங்கு கண்டாலும் அதற்கு "மற்றும்" என்ற சொல்லைப் போட்டு மொழிபெயர்க்கும் மோசமான நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் சாதாரணமாக And வருவதாலும் அம்மொழிகள் எம்மீது பண்பாட்டு ஆதிக்கம் செலுத்துவதாலும், அம்மொழிகளிலிருந்து ஏராளமான விடயங்கள் மொழிபெயர்ப்பாக எம் பண்பாட்டினுள் நுழைவதாலும் இந்த "மற்றும்" இப்போது சாதாரணமாக ஊடகங்களில் புழங்கிவருகிறது.

மொழிபெயர்ப்புக்களையும் தாண்டி, தமிழிலேயே எழுதப்படும் ஆக்கங்களிலும் இந்த "மற்றும்" கண்டபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துவதோடு, தமிழில் எழுதப்படும், சொல்லப்படும் விடயங்களைப் புரிந்துகொள்வதில் சிரமத்தினையும் மயக்கத்தினையும் ஏற்படுத்தி விடுகிறது. ("இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்துகிறது மற்றும் தமிழில் எழுதப்படும் மற்றும் சொல்லப்படும் விடயங்களைப் புரிந்துகொள்வதில் சிரமத்தினை மற்றும் மயக்கத்தினை ஏற்படுத்தி விடுகிறது" என்றுதான் இப்போதெல்லாம் எழுதுகிறார்கள். பாருங்கள் எவ்வளவு கடூரமாக இருக்கிறதென்று..)

எனவே ஊடகங்களிலில் இருப்பவர்கள் எழுத்தாளர்களும் தயவு செய்து தமிழை அதற்குரிய எளிய, இயல்பான இலக்கண அமைப்போடு எழுதவும் பேசவும் பழகிக்கொள்ளுங்கள். நீங்கள் செய்கிற மோசமான தவறுகள் தமிழர் மத்தியில் மோசமான மொழிப் பயன்பாட்டினை உருவாக்கிவிடுகிறது.

ஒரு நூறு பேர்களின் பெயர்களை தொடர்ந்து எழுதும் போது, ஒவ்வொரு பெயரின் பின்னால் “உம்” போடுவதை விட, பக்கத்தில் கமா போட்டு கடைசிப்பெயருக்கு முன்னுக்கு மற்றும் போட்டால் கொஞ்சம் இலகுவானது. -விமலாதித்தன் 

அது ஆங்கிலத்திலுள்ள நடைமுறையாகும். தற்கால ஆங்கில இலக்கணமும் அதுவேயாகும்.

மாறாக, தமிழில் உள்ள நடைமுறை என்ன?

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
--
குன்றக் கூறன் மிகைபடக் கூறல்
கூறியது கூறன் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொ்ற் புணர்த்தன் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுத னின்று பயனின்மை
என்றிவை யீரைங் குற்ற நூற்கே.

மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளிலும் இருவேறு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது.
முதலாவதில் தொடர்ச்சியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இரண்டாவதில் பட்டியலுக்குப் பிறகு "ஆகியவை" என்று முடிக்கப்படுகிறது.

இரு வகையிலும் காற்புள்ளி (கமா) வின் பயன்பாடு உள்வாங்கக்கூடிய நல்ல முறையாகும். பட்டியலிடும் சொற்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்போது வேறு பொருளையோ பொருள் மயக்கத்தையோ தருமாயின் காற்புள்ளி மிகவும் அவசியமானது.

எடுத்துக்காட்டாக, கந்தன் கமலா வெள்ளையன் முருகன் என்ற பட்டியலில் வெள்ளையனும் முருகனும் தனித்தனியான பெயர்களா அல்லது "வெள்ளையன் முருகன்" என்ற ஒரே பெயரா என்ற மயக்கம் வருகிறது. இங்கே காற்புள்ளி மிகுந்த பயனுடையதாகும். "திங்கள் செவ்வாய் புதன் வியாழக் கிழமைகளில்" என்று சொல்லும்போது காற்புள்ளிகூட அவசியமற்றுப் போகிறது.

மிக நீண்ட பட்டியலாயின்,

"வருணன், சோமன், அக்னி, பூசன், இந்திரன், வாயு ஆகிய தேவைதகளைத்தாம் ரிக் வேதம் குறிப்பிடுகிறதே அன்றி, இன்றுள்ள சிவன், திருமால், முருகன், காளி, பிள்ளையார், ஐயப்பன், இலக்குமி, கண்ணகி ஆகிய/எனும் கடவுள்கள் எவையுமே அவ்வேதத்தில் இல்லை" என்றவாறு எழுதலாம்.

No comments:

Post a Comment