Friday, April 26, 2013

மாணவர் எழுச்சி பற்றி..

[Facebook உரையாடல்]


மக்களுக்கும் அவர்களுள் ஒரு பகுதியான மாணவர்களுக்கும் கோபம் வருவது இயற்கை. ஒரே கோபம் பலருக்குக் கூட்டாக வரும்போது அது அரசியற் பெறுமதி கொண்ட கோபமாக, உணர்வெழுச்சியாக மாறுகிறது. மக்களுக்கு வரும் இந்தக் கோபம் நல்ல நோக்கத்தோடுதான் வரவேண்டுமென்றில்லை. சக மனிதர்கள், சிறுபான்மைகள், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள், மத மறுப்ப்பாளர்கள் மேலெல்லாம் மக்களுக்குக் கூட்டாகக் கோபம் வரலாம். தவறான பிரசாரங்கள் நன்கு எடுபட்டுப்போய்க் கோபம் வரலாம். 


எனவே மக்கள் எழுச்சிகள், மாணவர் எழுச்சிகள் என்று ஏதாவது நிகழ்ந்தால் அதனைக் கண்ணைமூடிக்கொண்டு முழுமையாக ஆதரித்து நிற்பதென்பது தவறான போக்காகும்.

மக்களுக்கு எழும் இயல்பான கோபத்துக்குக் கடிவாளமிட்டு ஆற்றுப்படுத்தி முழு வேகத்தோடு எதிரிக்கெதிராகச் சரியான பாதையில் செலுத்தவேண்டிய பணியினை ஒரு தலைமை செய்யவேண்டியிருக்கிறது. அதனைச் செய்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் அது வெறும் கலவரமே. அரசியல் எழுச்சி அல்ல.

மக்கள் எழுச்சிகளுக்கு சரியான அரசியற் தலைமையினைப் பாட்டாளிவர்க்கக் கட்சி வழங்கவேண்டும் என்பது மரபார்ந்த கம்யூனிஸ்ட் எதிர்பார்ப்பாகும். அந்தளவுக்குப் போகாவிட்டாலும், கூடங்குளம் போன்று ஒரு போராட்டக்குழு உருவாக்கப்பட்டு அக்குழு சனநாயக நடைமுறையில் போராட்டத்தின் கோரிக்கைகள் போக்குகள் குறித்த அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

வெளியில் இருந்து பார்க்கும் எனக்கு அவ்வாறானதொரு பொதுவான கோரிக்கைகளோ அரசியல் வழிமுறைகளோ இம்மாணவர் எழுச்சியில் இருப்பதாகத் தெரியவில்லை. போராடும் மாணவர்கள் ஒரு சாரார் ஐ நா தீர்மானத்தை எரிக்கிறார்கள் இன்னொருசாரார் இந்தியா அதை ஆதரிக்க வேண்டும் என்று முழங்குகிறார்கள். பிக்கு மீதான தாக்குதலை எந்தவொரு மாணவர் போராட்டக்குழுவும் கண்டித்ததாகத் தெரியவில்லை. இவ்வாறாக வெறும் உணர்வெழுகையும் கோபமும் என்ற நிலையில் தான் இப்போராட்டம் இன்னமும் இருப்பதாகப் படுகிறது. தமிழீழம் என்கிற பொதுப்போக்கு முழக்கம் காணப்பட்டாலும் அதன் பிறகு வரும் முழக்கங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று முரணானவையாக இருக்கின்றன.

போராட்டக் குழு உடனடியாகக் கட்டப்படவேண்டும். பொதுவான கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும். ஈழத்தமிழர் விவகாரம் முதன்மை பெற்றிருந்தாலும் தம்ழிஅக மக்களது அரசியற்கோரிக்கைகளும் சேர்க்கப்படவேண்டும். அப்போதுதான் போராட்டம் பரந்த மக்கள் ஆதரவை அது நிலைகொள்ளும் தளத்தில் பெறும்.

அல்லாவிடின் இது ஓரு வெறும் உணர்வெழுச்சியாக மாறி பிய்ந்தும் சிதறியும் அடங்கிப்போகும். வரலாற்றில் இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு. சிங்களத்தில் சொல்வார்கள் "சிங்களவர்கள் உடைத்த சோடாப்போத்தல் போல" என்று அவ்வப்போது கொந்தளித்துவிட்டு புஸ் என்று அடங்கிப்போவாரகள், தொடர்ந்து போராட மாட்டார்கள் என்ற அர்த்தத்தில்.

No comments:

Post a Comment